வியாங்கொட ஆயுதக் களஞ்சியம் அம்பேபுஸ்ஸவுக்கு மாற்றம்
வியாங்கொட இராணுவத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் பிரதான ஆயுதக் களஞ்சியத்தை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பேபுஸ்ஸவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்படவுள்ள கட்டடங்களைச் சுற்றிய பாரிய மண் அணைகள் அமைக்கப்படவுள்ளன.
வெலிசறை கடற்படைத் தளத்தில், அமைந்துள்ள ஆயுதக் களஞ்சியமும் கூட எதிர்காலத்தில் அம்பேபுஸ்ஸ இராணுவத் தளத்துக்கு மாற்றப்படவுள்ளது.
எனினும், வியாங்கொட மற்றும் வெலிசற தளங்களில் தங்போது வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் அனைத்தையும், களஞ்சியப்படுத்தும் வசதி அம்பேபுஸ்ஸவில் கிடையாது என்றும் கூறப்படுகிறது.
வெடிபொருட் களங்சியங்களை நிலத்துக்குக் கீழ் கொங்றீட் பதுங்கு குழிகளில் அமைப்பதும், அதனைச் சுற்றி பாரிய மண் அணைகளை அமைப்பதும் அனைத்துலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறையாகும்.
மண் அணைகள் ஆபத்தை 50 வீதமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பேபுஸ்ஸ இராணுவத்தளம் அதிக சன அடர்த்தியுள்ள பகுதியில் அமைந்திராவிடினும், அதனைச் சுற்றி கணிசமானளவு வீடுகள் அமைந்துள்ளன.
சலாவ வெடிவிபத்து போன்ற ஒன்று நிகழ்ந்தால், இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அதேவேளை, நான்கு கட்டங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், சலாவ வெடிவிபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளது.
எனினும், சலாவ ஆயுதக் கிடங்கில் 20 ஆண்டுகளைக் கடந்த வெடிபொருட்களும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
காலம் கடந்த, வெடிபொருட்களை விற்பது அல்லது அழிப்பதே வழக்கம். எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுபோன்ற காலம் கடந்த வெடிபொருட்கள் வியாங்கொட ஆயுதக் களஞ்சியத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.