ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது பிரித்தானியா
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா – இல்லையா என்பதை தீர்மானிக்க நேற்று பிரித்தானிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில், அதிகளவு மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிந்திய செய்தி
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக 51.9 வீதமான பிரித்தானியர்கள் வாக்களித்துள்ளனர். எதிராக 48.1 வீதமானோர் வாக்குகளை அளித்துள்ளனர்.
இறுதி முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து, தாம் பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக பிரித்தானியப் பிிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகக் கூடாது என்று அவர் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தார். பிரித்தானிய மக்களின் கருத்து அதற்கு மாறாக இருந்த நிலையிலேயே கமரூன் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானிய மக்களின் முடிவு உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, அனைத்துலக பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
முன்னைய செய்தி
வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னமும் 8 முடிவுகளே அறிவிக்கப்பட வேண்டியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக, 16,835,512 பேர் (52 வீதம்) வாக்களித்துள்ளனர்.
இந்தக் கருத்து வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு ஆகக் குறைந்தது 16,813,000 வாக்குகள் தேவை என்ற நிலையில், இன்னமும் முடிவுகள் முழுமையாக வெளிவர முன்னரே, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்குத் தேவையான வாக்குகள் கிடைத்து விட்டன.
அதேவேளை, 15,130,139 பேர் (48 வீதம்) தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் 52 வீதமானோர் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளது.