அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களை ‘நோட்டம்’ விட்டார் அமெரிக்கத் தூதுவர்
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், தூதரக அதிகாரிகள் குழுவொன்று, இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை சென்று, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது.
நேற்றுமுன்தினமும், நேற்றும், அம்பாந்தோட்டைக்குச் சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர், மத்தல விமான நிலையம், துறைமுகம், மாகம்ருகுணுபுர அனைத்துலக மாநாட்டு மண்டபம், ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
அத்துடன், அம்பாந்தோட்டை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்கள் தற்போது முடங்கிய நிலையில் உள்ளன.
அம்பாந்தோட்டை முறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து, 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.