வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்காத உள்ளக விசாரணையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே, உள்ளக விசாரணையைக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
”உள்நாட்டு விசாரணைகளின் மூலம் நீதி நிலைநாட்டப்படுவதற்குரிய சூழல் தற்போது நாட்டில் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.
தெற்கிலுள்ள தேசியவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட சமஷ்டி தீர்வு ஒன்றின் மூலமே, தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட அனைத்துலக பிரதிநிதிகளிடம், தெளிவாக கூறியுள்ளேன்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னதாக, அனைத்து உண்மைகளையும் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.