முஸம்மிலுக்கு விளக்கமறியல் – அடுத்தடுத்து சிறை செல்லும் மகிந்த அணியினர்
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகமட் முஸம்மில் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அதிபர் செயலக வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முஸம்மில் கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரை எதிர்வரும் ஜூலை 04ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களான உதய கம்மன்பில, மொகமட் முஸம்மில் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது, கூட்டு எதிரணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.