அக்கரைப்பற்று இராணுவ முகாம் பதிவேடுகளை ஒப்படைக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு
கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடைசியாக கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும், அக்கரைப்பற்று இராணுவ முகாமுக்கு, வந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹோமகம நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிவான் ரங்க திசநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விசாரணைக்குப் பொறுப்பான, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிக்காவல்துறை கண்காணிப்பாளர் சானி அபேசேகர, நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி,பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 25ஆம் நாள் கடத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர்களால் அக்கரைப்பற்று இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மின்னேரியா இராணுவ முகாமில் இருந்து ஒன்பதாவது சந்தேகநபர் 30 லீற்றர் எரிபொருளை பெற்றிருப்பதாகவும், இதற்கான ஆதாரங்களை நிரூபிக்க சிறிலங்கா இராணுவத்திடமுள்ள ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்னேரியா இராணுவ முகாமின் எரிபொருள் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த மேஜர் ரோகண விக்கிரமசிங்கவின் ஆவணங்களை பெற்றுத் தருமாறும் அவர் நீதிபதியிடம் கோரினார்.
அத்துடன், மின்னேரியா இராணுவ முகாமில் இருந்து, எரிபொருளை பெற்ற ஒன்பதாவது சந்தேகநபர், குறிப்பிட்ட நாளில் இட்டிருந்த கையெழுத்து குறித்து அரச பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு உத்தரவிடுமாறும், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அக்கரைப்பற்று இராணுவ முகாமுக்கு வந்த இராணுவ அதிகாரிகள், வாகனங்கள் பற்றிய பதிவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, சந்தேக நபர்களை மே 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.