எசல வீரக்கோனுக்கு வெளிவிவகாரச் செயலர் பதவி – பின்னணிக் காரணம் வெளியானது
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், இடைக்கால நீதிச் செயல்முறை மற்றும் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான தேவைகளைக் கருதியே, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லியில் சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றும் எசல வீரக்கோன், சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூன் 1ஆம் நாள் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் உள்ள துறைசார் இராஜதந்திரியான, எசல வீரக்கோனை அடுத்த வெளிவிவகாரச் செயலராக நியமிக்கும்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பரிந்துரை செய்துள்ளார்.
வெளிவிவகாரச் செயலரை சிறிலங்கா அதிபரே நியமிப்பார். எனினும், எசல வீரக்கோள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் உள்ள மிக மூத்த அதிகாரி அல்ல. இவரை விடவும் மூத்த அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சில் பணியாற்றுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், இடைக்கால நீதிச் செயல்முறை மற்றும் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான தேவைகளுக்கு, எசல வீரக்கோன், இந்தப் பதவியில் நியமிக்கப்படுவது பொருத்தமானது என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர், நோர்வே மற்றும் இந்தியாவுக்கான தூதுவராகவும், அமெரிக்காவுக்கான பிரதித் தூதுவராகவும் பணியாற்றியவர்.
1988ஆம் ஆண்டுசிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இணைந்த இவர், 28 ஆண்டுகள் துறைசார் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளார்.
இவர், சிறிலங்காவின் ஒன்பது அதிபர்கள் மற்றும் பிரதமர்களின் நிர்வாகத்தில், பணியாற்றிய சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் மகனாவார்.
அதேவேளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் தற்போது மிக மூத்த அதிகாரியாக உள்ள, ஜெயந்த பலிப்பான நோர்வேக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூப்பு வரிசையில் இரண்டாவது இடத்தில், முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன இருக்கிறார்.அவர் தற்போது தாய்லாந்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார். மூன்றாவது இடத்தில் ரஞ்சித் உயங்கொட இருக்கிறார். இவர்கள் மூவரும் 1985ஆம் ஆண்டு வெளிவிவகார சேவையில் இணைந்தவர்கள்.
இவர்களையடுத்து, மூப்பு வரிசையில் நான்காவது இடத்தில், ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக பணியாற்றும் ரவிநாத ஆரியசிங்க இருக்கிறார். இவர் 1988ஆம் ஆண்டு வெளிவிவகாரச் சேவையில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.