தலையில் படுகாயங்களுடன் மேஜர் ஜெனரல் மானவடு கொழும்பு மருத்துவமனையில் அனுமதி
சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியான, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கஸ்பேவ வீதியில் உள்ள தெல்கந்த பகுதியில் உள்ள வீட்டில் நடந்து கொண்டிருக்கும் கட்டுமானப் பணி ஒன்றின் போது, தவறி வீழ்ந்த மரக்குற்றி ஒன்று மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் தலையில் தாக்கி அவர் காயமடைந்ததாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்றது. உடனடியாக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தலையில் படுகாயமடைந்த அவருக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியடைந்தவுடன் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் சுமித் மானவடு பெர்றுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.