ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி ஜூலையில் மீள ஆரம்பம்
சிறிலங்கா மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான, மீன் ஏற்றுமதி வரும் ஜூலை மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்கா மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதற்குப் பரிந்துரைத்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் முடிவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்பதாக கூறப்பட்டுள்ளது,
இந்த தடை நீக்கப்பட்டுள்ளதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளுக்கு மீண்டும் மீன் ஏற்றுமதியை ஆரம்பிக்க முடியும்.
சிறிலங்காவின் மீன் ஏற்றுமதியில் 68 வீதம், ஐரோப்பிய சந்தைகளுக்கே அனுப்பப்பட்டு வந்தது. இதன் மூலம், 108 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது.
ஐரோப்பிய ஆணையத்தின் பரிந்துரைக்கமைய, வரும் ஜூலையில் இந்த தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், அந்த மாதம் தொடக்கம், ஏற்றுமதியை ஆரம்பிக்க முடியும் என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதித் தடையை நீக்குவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.