சவால்களை எதிர்கொள்ள சிறிலங்காவுக்கு உதவுகிறோம்- அமெரிக்க இராஜாங்கச் செயலர்
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் சவால்கள் உள்ள போதிலும், ஜனநாயகத்தின் முக்கியமான வெற்றிகளை அங்கு காண முடிகிறது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜொன் கெரி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் பற்றிய, ‘2015ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் நடைமுறைகள்’ என்ற அறிக்கையை வொசிங்டனில் நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“சவால்கள் பல இன்னமும் இருக்கின்ற போதிலும், சிறிலங்கா, துனீசியா, நைஜீரியா, மற்றும் பர்மா ஆகிய நாடுகளில், ஜனநாயகம் முக்கிய வெற்றிகளைப் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு உதவுவதற்காக, இந்த நாடுகளுடன் நாம் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்கத் திணைக்களத்தில் நடந்த இந்த நிகழ்வில், உலகிலுள்ள 199 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பாக மனித உரிமைகள் நிலவரங்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது.
உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் 40ஆவது அறிக்கை இதுவாகும்.