உள்ளகப் பொறிமுறை சிறிலங்கா இராணுவத்தை இலக்கு வைக்காது – ருவான் விஜேவர்த்தன
சிறிலங்கா இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றாலும் அது எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைக்கும் பொறிமுறையாக இருக்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதும் வடக்கில் ஜனநாயக செயற்பாடுகளை பலப்படுத்துவதும் பிரிவினைவாத செயற்பாடுகள் அல்ல.
முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கிறோம் என்பதற்காக தேசிய பாதுகாப்பில் நாம் அக்கறையற்றிருப்பதாக யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை. தற்போதைய நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனைத்துலக நீதிமன்றத்தின் மூலமாக எமது இராணுவத்தை விசாரிக்க அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா அதிபரும் பிரதமரும் இருக்கின்றனர். எனினும் உள்ளகப் பொறிமுறைகள் சரியான முறையில் நடைபெறும்.
இதன் போது இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றாலும் அது எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைத்த பொறிமுறையாக இருக்காது” என்றும்” அவர் தெரிவித்துள்ளார்.