அம்பாந்தோட்டையில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைக்கிறது சீனா
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா முன்வந்திருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றில் முதலீடு செய்ய சீனா முன்வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை, அமைப்பதற்கு சீனாவின் எக்சிம் வங்கியே கடனுதவிகளை வழங்கியிருந்தது.
அம்பாந்தோட்டைத் துறைமுகம் விரைவில் நாட்டின் பொருளாதார, வர்த்தக மூலோபாயத்தில் இணைந்து கொள்ளும் என்றும், கடல் வழிப் போக்குவரத்தில் முக்கியமான தளமாக இருக்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் கூறியிருந்தது.
அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் சிறப்பு பொருளாதார முதலீட்டு வலயம் ஒன்றை அமைப்பதற்கு இடமளிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.