உலக மாற்றங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும்- ரணில்
உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில், 161 இளநிலை அதிகாரிகளை பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மோதல்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்தகால மோதல்களின் காயங்களை ஆற்றும் நகர்வுகள் முன்னெடுக்கப்படும் போது, இராணுவத்தின் பெயர் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்.
நீங்கள் காயப்படுத்தப்பட்டிருந்தால், அதனை இலகுவில் குணப்படுத்த முடியாது.
சீனா , இந்தியா ஆகிய நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை சிறிலங்கா வைத்திருக்க வேண்டியுள்ளது.
முன்னேறிய உலகத்துக்கு இணையாக சிறிலங்கா இராணுவம் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்.
சிறிலங்கா இராணுவத்தின் தரத்தை முன்னேற்றுவதற்கு, இந்தியா, சீனா மட்டுமன்றி, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடனும் நல்லுறவுகள் பேணப்படுவது அவசியம்.
இந்த நாடுகளுடன் உறவுகளை வைத்திருந்தால் தான், இராணுவத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.
எதிர்காலத்தில் இராணுவம் எந்தச் சூழ்நிலையையும், எதிர்கொள்ளத்தக்க நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்கால போர் முறை பற்றிய திட்டம் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.
உலகம் முழுவதும், நிலைமைகள் இப்போது மாறியுள்ளன. சிறிலங்கா இராணுவம் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.