மேலும்

கிராம இராச்சியத்தை ஒருபோதும் கூட்டமைப்பு ஏற்காது – மாவை சேனாதிராசா

mavai-senathirajahமாகாணசபைகளுக்கு இருக்கும் குறைந்தளவு அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் வகையில், சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள, கிராம இராச்சிய திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கென 294 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில்,  2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கென மேலதிகமாக 13 பில்லியன் ரூபாவை அதிகரித்து மொத்தமாக 307 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வல்லமை கொண்ட நாடுகள் கூட  வரவு செலவுத்திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில்,  4 முதல் 7 வீதமான தொகையினையே  பாதுகாப்புக்கான ஒதுக்கீடு செய்து வருகின்றன.

போர் இல்லாத நிலையில் இங்கு 14 வீதமான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று  போரினால், பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி  மிக அற்பமானதாகவே காணப்படுகிறது.

வடக்கின் அபிவிருத்தி கட்டமைப்புக்கென 16 பில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கொழும்பிற்கும் தெற்கிற்கும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எம்மிடத்தில் வரியைப் பெறுகின்ற அரசாங்கம் அதனூடாக எமது பகுதிகளுக்கு செலவிடுவதை விடுத்து அந்த நிதியை தெற்கிற்காக ஒதுக்கி கொண்டுள்ளது.

எமது வரிப்பணத்தை தெற்கிற்காக செலவிடுவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம்,  வடக்கு-கிழக்கின் அபிவிருத்திக்கும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட மீள்கட்டியெழுப்புதல் நடவடிக்கைகளுக்கும் என 2016 இல் இடம்பெறவுள்ள உதவி வழங்குனர் மாநாட்டில் நிதி உதவியைக் கோரப் போவதாகக் கூறுகின்றது.

போரில் அழிவுக்குள்ளான, இழப்புக்களை சந்தித்துள்ள வடக்கு-கிழக்கின் உண்மையான நிலவரங்களை மதிப்பீடு செய்யாத நிலையில்,  உதவி வழங்குனர் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த அடிப்படையைக் கொண்டு உதவி கோரப் போகிறார் என்று புரியவில்லை.

வடக்கு-கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்கின்ற எந்தவொரு வேலைத்திட்டங்களின் போதும் அதாவது மீள்குடியேற்றம், மீளமைப்பு, அபிவிருத்தி ஆகியவற்றை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் எமது மக்கள் பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்படுதல் முக்கியமானது. எம்மையும் இணைத்து எமது ஆலோசனைகளும் உள்வாங்கப்படல் வேண்டும்.

தற்போது கிராம இராச்சியம் என்றதொரு திட்டத்தை நடைமுறைப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருகிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரங்களையும் இல்லாதொழிக்கவே செயற்படுத்தப்பட்டிருக்கிறது.

எனவே கிராம இராச்சியத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் எதிர்க்கின்றோம்.

அரசாங்கம் எந்தவொரு திட்டத்தை முன்வைத்தாலும் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருந்தாலும் மக்களின் விருப்பத்தை அறியாத எந்தவொரு திட்டமும் வெற்றியளிக்கப் போவதில்லை.

இதில் எமது மக்களுக்கு சந்தேகத்துக்கு இடமளிக்க முடியாது. இருக்கும் அதிகாரங்களை குறைக்கும் திட்டத்தை நாம் ஏற்கமாட்டோம்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதன்பின்னர் வேண்டுமானால் இத்திட்டம் குறித்து பரிசீலிக்கலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “கிராம இராச்சியத்தை ஒருபோதும் கூட்டமைப்பு ஏற்காது – மாவை சேனாதிராசா”

  1. மனோ says:

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே இருக்கும்.

    உங்கள் தலைமை நிலைக்கட்டும். ஒற்றுமையாய் இணைந்து ஒன்றாய் வாழ்வோம். சிங்களம் தருவதை தரட்டும் தராமலும் விடட்டும்.ஒரே இனம் ஒரே நாடு .ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *