மேலும்

வடக்கு பெண்களை தற்கொலைக் குண்டுதாரிகளாக்கியது பிரதான அரசியல் கட்சிகளே – டிலால் பெரெரா

dilan pereraசிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த காலங்களில் பிரிந்து நின்ற கயிறிழுத்துக் கொண்டிருந்ததால் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது போனது என்று தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற, வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பிரபாகரனின் தலைக்குள் விசத்தை ஏற்றி, வடக்கில் வாழ்ந்த பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளே ஏற்படுத்தின.

இந்த இரண்டு பிரதான கட்சிகளின் பகைமை அரசியல் அதிகார ஆசையே இந்த நிலைக்கு காரணமாக அமைந்தது.

இனி மேலும் எம்மிடையே பகைமை அரசியல் வேண்டாம். அதனை கைவிடுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

போர்இடம்பெற்ற காலத்தில் நான் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவாலாக்கலை வழங்க வேண்டும். தேசிய பிரச்சினைக்கு சமாதான தீர்ப்பு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதற்காக சமாதான பாத யாத்திரைகளில் கலந்து கொண்டேன். போராட்டங்களில் கலந்து கொண்டேன். இதனால் என்னை சிங்களப் புலி என்றார்கள். சிங்கள மக்களுக்கு எதிரானவன் என விமர்சித்தார்கள்.

சமாதானத்திற்காக நாம் நடத்திய கூட்ட மேடைகளில் அத்துமீறிப் புகுந்து பொதுபல சேனாவினர் எம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மை பாதுகாக்க சுதந்திரக் கட்சியினரோ ஐக்கிய தேசிய கட்சியினரோ முன்வரவில்லை.

இலங்கையில் வாழும் சிங்கள தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாதிகள் அல்ல. ஆனால் அரசியல்வாதிகள் தமக்குள்ள அதிகார ஆசையினால் இனவாதத்தை தூண்டுகின்றனர். அரசியல்வாதிகளே இனவாதிகள்.

இதன் காரணமாகவே பிரபாகரன் உருவானார். இனிமேல் ஒரு பிரபாகரன் வேண்டாம். சந்தர்ப்பவாத பகைமை அரசியலை ஒதுக்குவோம். இனவாத அரசியலை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம்.

தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். அது சட்டவிரோதமல்ல என நான் இச் சபையில் வாதாடினேன். குரல் கொடுத்தேன்.

இதனை அன்று திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்த்தார். என்னை சிங்களப் புலி என விமர்சித்தார். மக்கள் இன்று அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த காலங்களில் பிரிந்து கயிறிழுத்துக் கொண்டிருந்ததால் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது போனது.

இன்று வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் இணைந்து ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இறுதி சந்தர்ப்பமாகும். இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை தவறவிடக்கூடாது.

இனியும் தேசிய பிரச்சினையோடு கால்பந்து விளையாடாது அதற்கு நிலையான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவே சந்தர்ப்பவாத அரசியலை தூக்கியெறிவோம்.உடனடியாக செயலில் இறங்குவோம்.

மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத வகையில் புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்போம்.” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *