பெப்ரவரியில் அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – அமெரிக்க அதிகாரி அறிவிப்பு
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முதலாவது அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச்செயலராக முன்மொழியப்பட்டுள்ள, தூதுவர் தோமஸ் சானொன் நேற்றிரவு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தோமஸ் சானொன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்னிரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் இணைந்து செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினர்.
இதன்போதே, ஆண்டு தோறும் நடத்தப்படவுள்ள அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடலின் முதலாவது கூட்டம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வொசிங்டனில் நடைபெறும் என்று தோமஸ் சானொன், தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளின் எல்லா அம்சங்கள் குறித்தும் பேச்சு நடத்த இந்தக் கூட்டம், வாய்ப்பை வழங்கும்.
எந்த வழிகளில் சிறிலங்காவில் அரசாங்கத்துடனும், மக்களுடனும் அமெரிக்கா நேரடியாக இணைந்து செயற்பட முடியும் என்பதைக் கலந்துரையாடும் வாய்ப்பாகவும் இது அமையும்.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, அனைத்து மட்டங்களிலும் பரந்தளவில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்கா உதவியளிக்கும்.” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.