இந்திய கொள்கை ஆய்வாளர்கள் குழு சிறிலங்காவில் – பாதுகாப்புச் செயலருடன் பேச்சு
இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி தலைமையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய கொள்கை ஆய்வாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதியும், கொள்கை ஆய்வு நிறுவனமான, விவேகானந்தா அனைத்துலக நிறுவகத்தின் தற்போதைய பணிப்பாளருமான ஜெனரல் நிர்மல் சந்த் விஜ் தலைமை தாங்குகிறார்.
இவர், 2003ஆம் ஆண்டு தொடக்கம், 2005ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர்.
இவருடன், இந்திய இராணுவத்தின் முன்னாள் பிரதித் தளபதி லெப்.ஜெனரல் ரவி சோனி, “ரோ“வின் முன்னாள் செயலரான சி.டி.சகாய், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் அலுாக் பிரசாத் ஆகியோரும் சிறிலங்கா வந்துள்ளனர்.
இவர்கள், நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் அமைச்சில், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன், மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.