வடக்கில் மாவீரர் நாளை சிறிலங்கா காவல்துறை தடுக்க வேண்டும் – என்கிறார் மகிந்த
இந்த வாரம் மாவீரர் நாளை ஒட்டி, வடக்கில் விடுதலைப் புலிகளின் கொடி ஏற்றப்படுவதற்கு சிறிலங்கா காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
“எனது அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றவோ அல்லது அவர்களை நினைவு கூரவோ ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
இந்த வாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கில் புலிக்கொடியை ஏற்ற சில குழுக்கள் தயாராகி வருகின்றன.
இந்த வாரத்தின் முக்கியத்துவத்தை தெற்கில் உள்ள சிலர் மறந்து விட்டார்கள்.
கடந்த காலங்களில் பிரபாகரன் மாவீரர் வாரத்தில்,தெற்கிலோ, சில கிராமங்களிலோ தாக்குதல் நடத்தி வந்தார்.
புலிக்கொடியை ஏற்ற அனுமதித்தால், அது புலிகளுக்கு முன்பாக மண்டியிட்டு நின்றதாகி விடும்.
மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டிருந்தார் பிரச்சினையில்லை. அவர்கள் சிறிலங்காவுக்கு வரமுடியும்.
ஆனால், தடை விலக்கப்பட்ட குழுக்கள் இன்னமும் தனி நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.