இன்று மேலும் 8 அரசியல் கைதிகளுக்கு பிணை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக வரும் 20ஆம் நாளுக்குள் 62 அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
இதற்கமைய, முதற்கட்டமாக, கடந்த 11ஆம் நாள், 31 அரசியல் கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 26 பேர் மட்டுமே தமிழ் அரசியல் கைதிகள் அடங்கியிருந்தனர்.
ஏனையோர், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளாவர்.
இந்த நிலையில், இன்று மற்றொரு தொகுதி அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள 8 அரசியல் கைதிகளை இன்று பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.
அதேவேளை, கடந்த 11ஆம் நாள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட 24 பேரே இதுவரையில் சிறைச்சாலைகளில் இருந்து விடுதலையாகியுள்ளனர்.
ஏனையவர்களில் நால்வருக்கு வேறு வழக்ககள் இருப்பதால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய மூவர் இன்று விடுதலை செய்யப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.