கடும் நிபந்தனைகளுடன் 31 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்றம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் இன்று பிற்பகல் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், நீதிவான் அருணி ஆட்டிக்கல 32 கைதிகளையும், மீண்டும் வரும் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இன்று பிற்பகல் சட்டமா அதிபரின் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டவாளர், அரசியல் கைதிகளின் வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது தெரியாது என்று கூறி, 31 தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கான மனுவை சமர்ப்பித்தார்.
இதையடுத்து, நீதிமன்றில் இன்று பிற்பகல், 3 மணியளவில் மீண்டும் நிறுத்தப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலபிட்டிய அனுமதி அளித்தார்.
01 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணைக்கு இரண்டு பேர் கையெழுத்திட வேண்டும்.
நிரந்தர வசிப்பிடத்தை தெரியப்படுத்த வேண்டும், வசிப்பிட மாற்றம் குறித்து தகவல் அளிக்க வேண்டும்.
வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வவுனியா அல்லது கொழும்பில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு வரும் ஜனவரி 27 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று மாலை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்துக்கு அரசியல் கைதிகள் அழைத்து வரப்பட்டு பிணை வழங்கப்பட்ட போது, கைதிகளின் சார்பில் அவர்களைப் பிணையில் எடுக்க உறவினர்கள் எவரும் வந்திருக்கவில்லை.
இன்று காலையில் நீதிமன்றத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.
இதனால், இன்று பிற்பகல் 31 அரசியல் கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி கிடைத்த போதும், பிணையில் எடுக்க யாரும் முன்வைராததால், மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.