மேலும்

இரண்டு கட்டங்களாக நடக்கிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி

SLINEXதிருகோணமலையில் நேற்று ஆரம்பமாகியுள்ள இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.

SLINEX என்ற பெயரில், 2005ஆ ம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் இந்தக் கூட்டுப் பயிற்சி நேற்று, திருகோணமலையில் ஆரம்பித்தது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்தியக் கடற்படையின் சாவித்ரி, கோரா, கிர்பன் ஆகிய போர்க்கப்பல்கள். நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

நேற்று ஆரம்பித்த இந்த கூட்டுப் பயிற்சி, வரும் நொவம்பர் 1ஆம் நாள் வரை தொடரும்,

இந்தக் கூட்டுப் பயிற்சி இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன. முதற்கட்டமாக தற்போது, துறைமுக பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றன.

இதன்போது, நிபுணத்துவ, கலாசார, சமூக செயற்பாடுகள் இடம்பெறும்.

இதையடுத்து, இரண்டாவது கட்டமாக கடற்பயிற்சிகள் வரும் 30ஆம் நாள் ஆரம்பமாகும்.

மூன்று நாட்கள் நடக்கவுள்ள இந்தக் கடற்பயிற்சியில், கடற்கொள்ளை முறியடிப்பு, துப்பாக்கிச்சூடு, உலங்குவானூர்தி நடவடிக்கைகள், தற்காப்பு பயிற்சிகள் உள்ளிட்ட தள நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகள் இடம்பெறும்.

இதற்கிடையே, திருகோணமலைத் துறைமகத்தை நேற்றுக்  காலை வந்தடைந்த இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகளை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *