ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் இராணுவ ஆலோசகராகிறார் மேஜர் ஜெனரல் உபய மெடவெல
சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் படைகளின் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் உபய மெடவெல, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில், மேஜர் ஜெனரல் உபய மெடவெல இந்தப் புதிய பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புதிய பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, மேஜர் ஜெனரல் உபய மெடவெல, தற்போது வகித்து வருகின்ற மேற்குப் படைகளின் தலைமையகத் தளபதி மற்றும், இராணுவப் பெண்கள் படையணியின் தளபதி பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, நாளை முதல் இராணுவத் தலைமையகத்துடன் இணைக்கப்படவுள்ளார்.
மேஜர் ஜெனரல் மெடவெல, முன்னர் சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக இருந்தவர் என்பதுடன், ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 17ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற சிறிலங்கா அரச குழுவிலும் இடம்பெற்றிருந்தவர்.
சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டதாரியான இவர், அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள அனைத்துலக சட்டக்கல்விகக்கான பாதுகாப்பு நிறுவகத்திலும் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிறிலங்கா இராணுவத்தின் கட்டளை அமைப்பில் இந்த வாரம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் இரத்தினசிங்கம், இன்று தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, நாளை முதல் மேற்குப் படைகளின் தலைமையகத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சிப் படைகளின் தலைமையகத் தளபதியாக, மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நேற்றுத் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 5 பிரிகேடியர்கள், மற்றும் கேணல்கள், லெப்.கேணல்கள் தர அதிகாரிகளுக்கும் இந்த வாரம் இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.