மேலும்

மோசமடையும் அரசியல் கைதிகளின் உடல்நிலை – சிறிலங்கா அரசு பாராமுகம்

tamil-prisoners-relatives-demo (2)தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த  தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில், நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு அரசியல் கைதிகள் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளையோ, முறையான வாக்குறுதிகளையோ எடுக்காத நிலையில், நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், கைதிகளின் உடல் நிலை பலவீனமடைந்து செல்வதால், நீராகாரத்தையேனும் அருந்தும்படி ஆலோசனை வழங்கினர். எனினும் கைதிகள் அதற்கு இணங்கவில்லை.

நேற்று நண்பகல் சிறைச்சாலை ஆணையாளர் ரோகண புஷ்பகுமார மகசின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் நிலைமையைப் பார்வையிட்டார்.

மேலும், அமைச்சர் மனோ கணேசனும் மகசின் சிறைச்சாலைக்கு நேற்று மாலை சென்று கைதிகளுடன் பேசினார்.

Sri Lanka Prisoners

tamil-prisoners-relatives-demo (3)

Sri Lanka Prisonerstamil-prisoners-relatives-demo (5)tamil-prisoners-relatives-demo (6)

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுமாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 35 தமிழ் அரசியல் கைதிகளையும் பார்வையிட்டனர்.

இதற்கிடையே, மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும், அரசியல் கைதிகளின் உறவினர்களும், நேற்று சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமது உறவுகளைப் பார்வையிட்டனர்.

இதற்கிடையே, உண்ணாவிரதமப் போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மகசின் சிறைச்சாலையில் நால்வரும் அனுராதபுர சிறைச்சாலையில் ஒருவருமாக, ஐந்து கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மகசின் சிறைச்சாலையில் மேலும் ஆறு பேரும் அனுராதபுர சிறைச்சாலையில் ஒருவருமாக  ஏழுபேரின் உடல் நிலை  மோசமடைந்ததையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மகசின் சிறைச்சாலையில் கே.தயாபரன், கே.சிவாஜி, ரி.நேசமுருகன், எஸ்.உமாகரன், பி.மனோகரன், சகாதேவன் ஆகியோரும், அனுராதபுரவில் கே.கோபிநாத்தும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

அதேவேளை, கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் தொடர்பாக வரும் 20ஆம் நாள் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் இன்று சிங்கப்பூர் செல்வதாகவும், அங்கிருந்து திரும்பியதும், கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, மூன்று நாட்களாக அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கம் தரப்பில் இருந்து பொறுப்பு வாய்ந்த எந்தப் பதிலும் வழங்கப்படாதுள்ளமை கைதிகள், உறவினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் தமிழ் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக கொழும்பில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாளை வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் பெரியளவில் போராட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *