மேலும்

ஜெனிவா தீர்மானம் முழுமையான நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன் செவ்வி

sampanthanஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் நலனைக் கருத்திற் கொண்டு வரையப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

‘சண்டே லீடர்’ ஊடகத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஆர். சம்பந்தன் வழங்கிய நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: நீங்கள் சிறிலங்கா மீதான ஐ.நா தீர்மானத்தை பாராட்டியுள்ளீர்கள். ஆகவே இத்தீர்மானத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இது தொடர்பான தங்களது கருத்துக்கள் என்ன?

பதில்: சிறிலங்கா மீதான ஐ.நா தீர்மானத்தை அரசாங்கமானது நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் முற்று முழுதாக நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இத்தீர்மானமானது நாட்டில் அமுல்படுத்தப்படும் போது இது தொடர்பில் நாங்கள் மிகவும் சாதகமான பங்களிப்பை மேற்கொள்வோம். இத்தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கமானது நிறைவேற்றுவதற்கு நாங்கள் எமது ஆதரவை வழங்குவோம். இது நாட்டின் அடிப்படை நலனைக் கருத்திற் கொண்டு செயற்படுத்தப்படும் என நாங்கள் நினைக்கிறோம். அத்துடன் நாட்டில் பாதிக்கப்பட்டு வாழும் தமிழ், சிங்கள  மற்றும் முஸ்லீம் மக்களினதும் சிறந்த நலன்களை உள்ளடக்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்த மக்களுக்கு புதியதொரு விடிவு என்பது தேவை. இத்தீர்மானமானது முற்று முழுதாக இதயசுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் அமுல்படுத்தப்படும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்கும்.

கேள்வி: பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த வல்லுனர்கள், நீதிபதிகளின் உதவியுடன் சிறிலங்காவில் புதிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அமுல்படுத்தப்படும் என்கின்ற பொதுவான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆகவே உள்ளக விசாரணைப் பொறிமுறை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளதா?

பதில்: நான் எந்தவொரு சர்ச்சைகளுக்கும் உட்பட விரும்பவில்லை. ஐ.நா தீர்மானமானது இதயசுத்தியுடன் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே இங்குள்ள தேவையாகும்.

கேள்வி: இவ்வாறான விவகாரங்களை ஆராய்வதற்காகவும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் சில ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. ஆனால் இவ்வாறான உள்ளகப் பொறிமுறைகள் தோல்வியையே அடைந்துள்ளன. ஆகவே, நீங்கள் எவ்வாறு இப்புதிய பொறிமுறையை ஏற்றுக்கொள்கிறீர்கள்?

பதில்: கடந்த காலங்களின் இவ்வாறான உள்ளக ஆணைக்குழுக்கள் தமது நடவடிக்கைகளைத் திருப்தியாகச் செயற்படுத்தவில்லை. இவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தம்மால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. கடந்த காலங்களில் தாம் விட்ட தவறுகளைக் கற்றுக்கொண்டு தமது தவறுகளைத் திருத்துவதற்கான ஒரு வாய்ப்பாக தற்போதைய தீர்மானத்தை வேறுபட்ட வடிவத்தில் அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வரும் என நம்பிக்கை மட்டுமே கொள்ள முடியும். சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் அரசாங்கமானது இந்த விடயத்தில் மேலும் உணர்வுபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், முற்றுமுழுதாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவளிக்காத ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஐ.நா தீர்மானம் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனவா?

பதில்: பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி கொள்ள முடியும். இது ஒரு விவகாரமல்ல. நாட்டினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் சிறந்த நலன்களை அடைந்து கொள்வதற்காக எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதே மிக முக்கியமான விடயமாகும். ஆகவே நாங்கள் இவற்றைக் கருத்திற் கொண்டே செயற்பட வேண்டும். நிறைய எதிர்பார்த்து தற்போது அதனால் அதிருப்தியடைந்துள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஒருவர் அதிக கவனம் கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி: அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்காத ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

பதில்: இல்லை. ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை நான் இங்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். இது தொடர்பில் சிலர் அதிருப்தியடைந்திருக்க முடியும். ஆனாலும் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர்.

கேள்வி: சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தனிப்பட்ட தீர்மானம் ஒன்றை இயற்றுவதற்கான நடவடிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இந்த விடயத்தை நாங்கள் கருத்திற் கொள்ள வேண்டுமா?

பதில்: இந்த நாட்டில் அனைத்து விடயங்களும் சரியாக இடம்பெற்றால், அது தொடர்பில் நாங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த நாட்டில் வாழும் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இவற்றை அமுல்படுத்துவற்கான பணியை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான விடயங்கள் இந்த நாட்டில் சரியாக முன்னெடுக்கப்படாதவிடத்து, எமது விவகாரங்களில் மற்றையவர்கள் தமது விரல்களை நீட்டத் தொடங்குவார்கள். ஆகவே எமது நாட்டின் விவகாரங்களில் மற்றையவர்கள் தமது விரல்களை நீட்டாது இருக்க வேண்டுமாயின் நாட்டில் அனைத்து விடயங்களும் சரியாக நடக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கேள்வி: இந்த விடயத்தில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் நாங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என நீங்கள் கூறுகிறீர்களா?

பதில்: இதனை இந்தியா கூறவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரே இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாங்கள் இவரது கருத்தை மதிக்கின்றோம்.  நாங்கள் இவற்றுக்கு எதிரானவர்கள் அல்லர். ஐ.நா தீர்மானமானது இதயசுத்தியுடன் அமுல்படுத்தப்படுமாயின், வெளியாட்களை நாங்கள் எமது விவகாரங்கள் நுழையவிடாது தடுத்து நிறுத்த முடியும்.

கேள்வி: ஐ.நா தீர்மானமானது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என சில புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்பார்க்கிறது?

பதில்: அவர்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

கேள்வி: தேசியப் பிரச்சினைக்கு சமஸ்டி முறைமை தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், இதனை சிறிலங்கா அரசாங்கம் மிகப் பலமாக எதிர்த்து நிற்கிறது. இந்த விவகாரம் தொடர்பான தங்களது கருத்து என்ன?

பதில்:  பல நாடுகளில் சமஸ்டி நிர்வாக முறைமையானது மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறிலங்காவின் பார்வையில் ‘சமஸ்டி’ என்கின்ற பதமானது சில பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்டி என்பது நீங்கள் பயப்படுவது போல் ஒன்றுமல்ல. இது முற்றிலும் சட்டரீதியாக அரசியல் யாப்பில் வரையப்பட்டு மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகும். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எமது பேச்சுவார்த்தைகளின் போது முன்னுரிமைப்படுத்துவோம்.

கேள்வி: இது தொடர்பாக நீங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளீர்களா?

பதில்: இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது என்னுடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளது. ஆனால் உத்தியோகபூர்வமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

கேள்வி: எதிர்க்கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்ற வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு என என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இவ்விரண்டுக்கும் இடையில் வேறுபாடுகள் எதையும் நான் பார்க்கவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சி என்ற வகையில் நான் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக உள்ளேன். நாங்கள் எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறோம். அத்துடன் என்னை மக்கள் தேர்வு செய்ததால் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகிக்கிறேன். ஆகவே இவ்விரண்டுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது.

கேள்வி: எதிர்க்கட்சியின் தலைவர் என்ற வகையிலும், தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும், சிறிலங்கா அரசாங்கமானது மிக வேகமாக அமுல்படுத்த வேண்டிய விவகாரங்களாக எவை காணப்படுகின்றன?

பதில்: ஐ.நா தீர்மானமானது முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது மிகவும் ஒரு சிக்கலான விடயம். முன்னுரிமைப்படுத்த வேண்டிய பல்வேறு விவகாரங்களை இத்தீர்மானமானது உள்ளடக்கியுள்ளது.

வழிமூலம்         – சண்டே லீடர்
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *