அரசியல்கைதிகள் எவரும் சிறையில் இல்லை – கைவிரிக்கிறார் சிறிலங்காவின் நீதி அமைச்சர்
சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலையை வலியுறுத்தி, இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே, சிறிலங்காவின் நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சிறைகளில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக நீதி அமைச்சுக்கு தற்போது எந்தப் பொறுப்பும் இல்லை.
இந்த விவகாரம் தற்போது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கையிலேயே உள்ளது.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. அரச மட்டத்திலேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். நீதிமன்றம் இந்த விடயத்தில் தலையிட முடியாது.
அதேவேளை தடுப்புக் காவலிலுலோ, சிறைச்சாலைகளிலோ அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது. தமிழ் அரசியல் கைதிகள் என்று இங்கு யாரும் இல்லை.
கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே சிறைகளில் கைதிகளாக உள்ளனர். இந்த விவகாரம் சட்ட ரீதியாகவே அணுகப்பட வேண்டும்.
ஐ.நா. அறிக்கையிலும் இந்த விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே அரசாங்க மட்டத்தில் இது ஆராயப்படும்.
ஐ.நா. அறிக்கை, ஜெனிவா தீர்மானம், உள்ளக விசாரணை தொடர்பாக அரசாங்க உயர்மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரையில் உள்ளக பொறிமுறை தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.