மேலும்

அடிமடி இழுவை வலை மீன்பிடி முறையை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் சுமந்திரன்

sumanthiranஅடிமடி இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடை செய்யும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய  அவர்,

“வடக்கு, கிழக்கு கடற்பிரதேசங்களுக்குள் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் எமது கடற்பரப்புக்களில் கடல் வளங்கள் அழிவடைகின்றன. எமது மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதுடன் தடைசெய்யப்பட்டுள்ள அடிமடி இழுவை வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான மீன்பிடி முறையினால், வலைகள் கடல் படுக்கை வரை சென்று வளங்களை அள்ளிச் செல்வதால் அவை முற்றாக அழிகின்றன.

இம் முறையில் பிடிக்கப்படுகின்ற மீன்களில் 80 வீதமான மீன்கள் விரயமாகின்றன. மிகுதி 20 வீதமானவையே பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய மீனவர்கள் இந்த அடிமடி வலை இழுவை முறையை இந்திய கடற்பரப்புக்குள் பயன்படுத்தியயதால், அங்குள்ள கடல்வளம் அழிந்துவிட்டது.

அதனால் தான் அவர்கள் தற்போது சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். இதனால் எமது கடற்பரப்பிலுள்ள வளங்கள் அழிந்து போகின்றன.

இந்திய மீனவர்கள் ஒருபுறம் இவ்வாறு மீன்வளத்தை அழித்து வருகின்ற அதேவேளை தென் மீனவர்களும் ஏனையோரும் வடக்கு கிழக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.

தென்னிலங்கை மீனவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடனேயே வடக்கில் நுழைவதுடன் எமது மீன்வளங்களையும் கொண்டு செல்கின்றனர்.

இதனால் எமது பகுதி மீனவ தொழிலாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

மீன்பிடி முறை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஒன்றையும் நான் நாடாமன்றத்துக்கு கொண்டு வந்தேன்.

எனவே எமது பிரதேச கடல் வளத்தை இல்லாதொழிக்கும் அடிமடி வலை இழுவை முறைமை இல்லாது செய்யப்ப்படுவதற்கான  சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *