சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைக்கு உதவத் தயார் – ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த சிறிலங்காவுக்கு உதவ ஜேர்மனி தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பிராங் வோல்டர் ஸ்ரெய்மேய்யர் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை கொழும்பு வந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களில், பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
இதற்கு அனைத்துலக உதவி இருக்க வேண்டும் என்று தாம் நம்புவதாகவும், ஆனால் அது எந்தளவுக்கு என்பது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆலோசித்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.