மேலும்

ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவு – முழுமையாக

UNHRC-meeting-roomஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்காவினால் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு வெளியாகியுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் இந்த தீர்மான வரைவு தயாரிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளின் பார்வைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மான வரைவின் முழுமையான விபரங்கள் வருமாறு-

ஐ.நா ம.உ.பே 30ஆவது அமர்வு – வரைவுத் தீர்மானம்

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்

செயற்பாட்டுப் பத்திகள்

  1. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புகூறலை ஊக்குவிப்பது தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது அமர்வில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் வாய்மூல அறிக்கை மற்றும், பேரவையின் 25/1 தீர்மானத்துக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட அதன் விசாரணை அறிக்கை, கண்டறிவுகள், முடிவுகளையும், பேரவையில் சமர்ப்பித்து, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது.
  2. முழுமையான அடிப்படையில் நீதியை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பு கவனிக்கப்பட வேண்டியது. குறிப்பாக குற்றவியல் தண்டனை, உண்மையைக் கண்டறிதல், நிறுவன ரீதியான மாற்றங்கள் மற்றும் மீள பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்தல் போன்ற காரணிகளை சுட்டிக்காட்ட முடியும்.
  3. நீதியை நடைமுறைப்படுத்துவதில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் விரிவான தேசிய கலந்துரையாடல்களின் ஊடாக இதனைச் செய்ய முடியும். அனைத்துலக நிபுணர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வலுவான ஓர் பாதுகாப்புப் பொறிமுறைமை அவசியமானது.
  4. அனைத்து இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் அவசியமானது என்ற சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது. பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைப் பொறிமுறைமை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மூலம் விசாரணைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்குமாறு சிறிலங்காவை ஊக்கப்படுத்துகிறோம்.
  5. அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவவோருக்கு எதிராக தண்டனை விதிக்க உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு, அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  6. உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள இடம்பெறாமை குறித்த ஆணைக்குழு உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் பொறிமுறைமைகள் பக்கச்சார்பற்ற நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற, தொழில்சார் தகமையுடைய நேர்மையானவர்கள் இந்த பொறிமுறைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும்.
  7. ஒவ்வொரு இடைக்கால நீதிப் பொறிமுறைமைகளும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் உள்ளிட்ட அனைத்துலகப் பங்காளர்களிடம் இருந்து, நிதி, பொருள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சுதந்திரமாக நிறுவப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  8. பாதுகாப்புத் துறைசார் விவகாரங்களில் காத்திரமான மாற்றங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். பாரிய மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தப்படும் படை அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தக் கூடாது. குறிப்பாக தற்காலிக நீதிப் பொறிமுறைமையில் அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மீறிய படை அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளடக்கப்படக் கூடாது.
  9. சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தக் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது. பாதுகாப்பு தரப்பினர், அரச அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிப்பவர்கள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.
  10. அரசபடையினரால் முன்னர் கைப்பற்றப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான மேலதிக நடவடிக்கை களை எடுக்கவேண்டும். குறிப்பாக பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு முழுமையான அகற்றப்பட வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். இந்த முயற்சிகளில் உள்ளூர் மக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சிறுபான்மையினரின் பங்களிப்பு முக்கியமானது.
  11. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து இலங்கையர்களுக்கும் பொறுப்புகூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், நீதியை நாட்டல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  12. ஊடகவயிலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத, இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசல்கள், கோவில்கள், தேவாலயங்கள் மீதான எல்லா தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படுவதுடன் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனையும் தடுக்க வேண்டும்.
  13. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல் மற்றும் ரத்து செய்தல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வரவேற்கப்பட வேண்டியது. அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட முடியும்.
  14. பலவந்த கடத்தல்கள் தொடர்பிலான அனைத்துலக பிரகடனத்தில் கைச்சாத்திட அரசாங்கம் காட்டும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது. காணாமல் போனவர்கள் தொடர்பாக உறவினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
  15. சட்டவிரோத படுகொலைகள், பலவந்த ஆட்கடத்தல்கள், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், கைது செய்து தடுத்து வைத்தல் குறித்த கொள்கைகளில் மாற்றம், சிவில் நிறுவனங்களை வலுப்படுத்தல், அதிகாரப் பகிர்வின் ஊடாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல், கருத்து சுதந்திரத்தினை உறுதி செய்தல் ஆகியனவற்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
  16. 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சமாதானப் பிரகடனம் வரவேற்கப்பட வேண்டியதாகும். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பயன்படுத்த சில சட்டங்களில் திருத்தங்களைச் செய்தல் மற்றும் ரத்து செய்தல் குறித்து அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்துலக பிரகடனங்களுக்கு மதிப்பளிப்பதனை உறுதி செய்ய வேண்டும்.
  17. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்டத்தை உரிய முறையில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25-1 தீர்மானத்தின் அடிப்படையிலும் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மீறியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்க உரிய வகையில் உள்நாட்டு சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
  18. கடந்த காலத்தில் விசாரணை நடத்தப்பட்ட அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதி வரவேற்கப்பட வேண்டியது. நிசாந்த உடலகம அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் பகிரங்கப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ம்நாள் வெலிவேரியவில் குடிநீர் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது படையினர் நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல் குறித்த, இராணுவ விசாரணை அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  19. மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்கள் அறிக்கைகளையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தனியார் அல்லது பொது நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்து பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
  20. அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலமே நாட்டின் அனைத்து குடிமக்களும் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும். 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அமைய, வட மாகாணசபை உள்ளிட்ட எல்லா மாகாண சபைகளும் காத்திரமாகச் செயற்படக் கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  21. அனைத்துலக உதவி மற்றும் நிபுணர்களின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்ட இடைக்கால நீதிச் செயற்பாடுகள் நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைந்துள்ளன. சிறிலங்காவில் இடைக்கால நீதியை நிலைநாட்டும் முனைப்புக்களில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் அனைத்துலக சமூகம், சிறிலங்கா வாழ் மக்கள், அனைத்துலக அமைப்புக்கள், அனைத்துலக நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்க வேண்டும்.
  22. அனைத்து வகையிலான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பால் நிலைசார் ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்க சிறிலங்காவை ஊக்கப்படுத்த வேண்டும். பால் நிலை ஒடுக்குமுறை சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  23. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் , சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கண்காணித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையையும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து பேரவையின் 34 ஆவது அமர்வில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும்.
  24. சிறிலங்காவின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் சிறப்பு ஆணை பெற்றவர்கள், மேற்கொள்ளும் பயணங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பான குழுவின் சிறிலங்கா பயணத்துக்கு அனுமதியளிக்க வேண்டும். சில பிரதிநிதிகள் நீண்ட காலத்திற்கு முன்னதாக சிறிலங்காவுக்கு பயணம்செய்ய விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை அவ்வாறான கோரிக்கைகள் குறித்து ஆராயப்பட வேண்டும். (ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 25-1 தீர்மானம்)
  25. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகமும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களும் சிறிலங்காவுக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.
  26. ஐ.நா மனித உரிமை ஆணையகத்துடன் இணைந்து செயற்பட புதிய அரசாங்கம் காட்டும் அக்கறை கவனிக்கப்பட வேண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *