சீனாவின் ஆதரவு இல்லையென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது – சரத் பொன்சேகா
30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய ஆதரவை மறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
சீன செய்தி நி்றுவனமான சின்ஹூவாவுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“சீனாவுடன் எப்போதும் சிறிலங்கா நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளும். அடிப்படையில், சீனாவின் ஆதரவு இல்லையென்றால், போரை எம்மால் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது.
சீனாவுடன் நாம் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் அந்த உறவைத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். சீனா எமக்கு செய்ததை நாம் மறந்து விடக்கூடாது.
இரண்டாவது உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர், சீனா அபிவிருத்தி அடைந்துள்ளதுடன், உலகின் ஏனைய நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி, உலக அமைதிக்கு கனமான பங்களிப்பை வழங்கியுள்ளது.
சீனாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளையும் தற்போதைய அதன் நிலையையும் நாம் மதிக்கிறோம்.
சீன இராணுவத்துக்கு ஒரு மிகப்பெரிய வரலாறு உள்ளது. அதற்கு ஒரு அங்கீகாரம் இருக்கிறது. சக்திவாய்ந்த படையான சீன இராணுவம், உலகில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அனைத்துலக உறவுகளை வலுப்படுத்தி, பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஏனைய நாடுகளுடன், அணிசேரா கொள்கையை சிறிலங்கா பின்பற்றுகிறது.
ஆனால், நிச்சயமாக நாம் பிராந்திய உறுதிப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள ஏரனைய நாடுகளுடன் நல்லுறவை பேண வேண்டியுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ஆற்றலையும், அந்தஸ்தையும் அங்கீகரிக்க வேண்டியுள்ளது.
நாம் இன்னமும் சிறிய நாடாகவே இருக்கிறோம். நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.