ஜெனீவாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வுகள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு எதிர்வரும் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இராஜதந்திரச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த அமர்வில் சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் அமெரிக்காவும் இறங்கியுள்ளது.
உள்நாட்டு வி்சாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தேடும் பரப்புரைகளை ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதுரகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
அங்குள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து, சிறிலங்காவுக்கு ஆதரவு தரும்படி, ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும் மற்றும் வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திரிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த பரப்புரைச் செயற்பாடுகளுக்காக பல்வேறு நாடுகளிலும் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகள் ஜெனீவாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இருந்து மதுக்க விக்கிரமஆராச்சி என்ற அதிகாரி இதற்காக ஜெனீவா சென்றுள்ளார்.
இதற்கிடையே, சிறிலங்காவுக்கு ஆதரவு தேடும்- சிறிலங்காவுடன் இணைந்து தீர்மானத்தைக் கொண்டு வருவது தொடர்பாக ஆராயும் முதலாவது உபமாநாடு ஜெனீவாவில் வரும் 17ஆம் நாள் நடத்தப்படவும் ஏற்பாடாகியுள்ளது.
வரும் 30 ஆம் நாள், சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.