சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து 25 பேரை நீக்கினார் மைத்திரி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரை கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர்களான டி.எம்.ஜெயரட்ன, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மற்றும் ஜோன் செனிவிரத்ன, சுசில் பிரேமஜெயந்த ஆகியோரும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் அடங்கியுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக, புதிதாக 25 பேரை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களில் சுதந்திரக் கட்சியின் புதிய பதில் செயலாளர் துமிந்த திசநாயக்க கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.