4 மாத ஆட்சியில் கடன்படுநிலையின் எல்லையைத் தொட்டது சிறிலங்கா
சிறிலங்கா அரசாங்கத்தின் செலவுகள் கட்டுமீறிச் சென்று விட்ட நிலையில், கடன்படு நிலையின் எல்லையை தொட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா நிதியமைச்சின் தரவுகளை ஆதாரம்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், புதிய அரசாங்கம், கடந்த நான்கு மாதங்களில் பெற்றுள்ள உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களின் மொத்த தொகை, 1.71 ரில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், கடன்பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவில் 96 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 120 நாட்களில் புதிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான சலுகைகள், நிவாரணங்களால், அதிக செலவினம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, மேலதிக வருமான மூலங்கள் இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள வரி மற்றும் கடன்களைக் கொண்டே அரசாங்கம் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையில் கடந்த வாரம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், 1.71 ரில்லியன் ரூபா வெளிநாட்டு, உள்நாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
அதேவேளை, 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், 1.78 ரில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறுவதற்கே அரசாங்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.