ஜூன் 30இற்குப் பின்னர் நாடாளுமன்றம் வருகிறது 20ஆவது திருத்தச்சட்டம்
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 30ஆம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
237 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான புதிய தேர்தல் முறையைக் கொண்ட 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான யோசனை நேற்றுமுன்தினம் நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அமைச்சரவையில் ஒரு மாதத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விவாதங்களின் முடிவில் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, 14 நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதன்படி வரும் ஜூன் 30ஆம் நாளுக்குப் பின்னர், 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் கருத்து கோரப்படும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இதனைச் சட்டமாக்க முடியுமா அல்லது கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்பது சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திலேயே தங்கியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற்ற பின்னர், நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும்.
அதன் பின்னரே, தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கும் குழு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.