2.2 பில்லியன் டொலருக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது சிறிலங்கா – அனைத்துலக அமைப்பு
தெற்காசியாவில் ஆயுதப் போட்டி வலுப்பெற்றிருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்காவும் கூட, 2.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை இறக்குமதி செய்திருப்பதாகவும், ஸ்ரொக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் பிரதான போட்டி நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும், ஆயுதங்களை விற்கும் மிகப்பெரிய ஆதாரமாக ரஷ்யா விளங்குகிறது.
அதேவேளை, பாகிஸ்தான், பங்களாதேஸ், மியான்மார், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு, ஆயுதங்களை விற்கும் பிரதான நாடாக சீனா விளங்கி வருகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆயுதங்களை விற்கும் முக்கிய நாடாக அமெரிக்காவும் இருக்கிறது.
இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகள், இஸ்ரேலிடம் இருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்காவின் மொத்த ஆயுத இறக்குமதி 2.2 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.
இதில் 0.7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
மேலும், 0.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இருந்தும், 0.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்ரேனிடம் இருந்தும், 0.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருந்தும், 0.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருந்தும், 0.4 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் ஏனைய நாடுகளிடம் இருந்தும் வாங்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.