இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம் – நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை சிறப்பு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டத்துக்கு அங்கீகாரமளிப்பதற்கே இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு இடையில் இன்னமும் இணக்கம் காணப்படாமல் இழுபறியாக உள்ளது.
அதேவேளை, நாளை சிறிலங்கா நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான குழப்பங்களில் ஈடுபடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் 20வது திருத்தச்சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படாவிடின், நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.