சிறிலங்காவின் புதிய பாதை அமெரிக்காவுக்கு கிடைத்த வரம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரி
நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப் வேபரவையில் உரையாற்றிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் ரிச்சர்ட் ஈ.ஹோக்லன்ட், இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான அவர்,
ஜனநாயக வழியில் நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும்.
சிறிலங்காவின் ஆட்சி முறையைப் பலப்படுத்த அமெரிக்கா உதவத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நீதி மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்த உதவிகள் அளிக்கப்படும்.
சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
புதிய அதிபர் பிரிவினை அரசியல் மற்றும் போலி முதலாளித்துவத்தில் இருந்து விலகி, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை நோக்கிய புதிய பாதையில் செல்கிறார்.
அந்த புதிய பாதையில் பயணிக்கும் சிறிலங்காவுக்கு நாம் நிறைய உதவிகளை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
சிறிலங்காவின் இந்தப் புதிய பாதை அமெரிக்காவின் நலன்களுக்கு ஒரு வரமாகும்.
நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் போது, இந்தியப் பெருங்கடலில், கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில், இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.