பசில் ராஜபக்ச, லலித் வீரதுங்கவிடம் விசாரணை தொடங்கியது
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், பசில் ராஜபக்சவின் பொறுப்பில் இருந்த திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து, வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 11 மணியளவில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு பணியகத்துக்கு பசில் ராஜபக்ச வந்தார்.
அதையடுத்து, அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலை அடுத்து, அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச நேற்று நாடு திரும்பிய நிலையில், இன்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை, சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவிடமும் இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் 600 மில்லியன் ரூபா பணத்தை, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு மாற்றியது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாகவே லலித் வீரதுங்கவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.