அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – அமைச்சர் விஜேதாச ராஜபக்ச
இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும், ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இல்லை என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரின் பணியகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டமை, ஆணைக்குழுவின் கடமைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடாகும்.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பதவி வழங்கப்பட்டது ஒரு முறைகேடாகும்.
அதுபற்றிய முறைப்பாடு குறித்து வாக்குமூலம் பெறவே மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டார்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, “இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையீடு செய்யும் உரிமை நாடாளுமன்றத்துக்கோ சபாநாயகருக்கோ கிடையாது.
ஆணைக்குழுவின் தலைவருக்கு அழைப்பாணை விடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை.
சிறிலங்காவின் முன்னாள் அதிபருக்கு எந்த சிறப்பு விலக்குரிமையும் கிடையாது. பதவியில் உள்ள அதிபருக்கு மட்டுமே அது உள்ளது.” என்றும் தெரிவித்தார்.