அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல்? – மைத்திரியின் வாக்குறுதியால் சந்தேகம்
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுக்காலை அதிபர் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், நேற்றுமாலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பிலும், அதிபர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்முறை மாற்றப்பட்ட பின்னரே தாம் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகவும், அவர் கூறியிருக்கிறார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்படுவதை விரும்பாத பின்னணியில், சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.
அரசியலமைப்பின் 20வது திருத்தமாக, தேர்தல் முறை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனை நிறைவேற்றுவதில் இழுபறிநிலை ஏற்பட்டால், அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் நிலை ஏற்படலாம்.
சிறிலங்காவின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.