நன்றாக கையாளப்பட்டால் சிறிலங்கா உலகிற்கு முன்னுதாரணமாக அமையும் – ஐ.நா நிபுணர்
நன்றாக கையாளப்பட்டால், பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும், நிலையான அமைதியை எட்டுவது என்பதில் சிறிலங்கா விவகாரம் ஒரு முன்னுதாரணமானதாக இருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.
உண்மையை ஊக்குவித்தல், நீதி, நல்லிணக்கத்துக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் சிறிலங்காவில் தனது பயணத்தின் முடிவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த மார்ச் 30ம் நாள் தொடக்கம், ஏப்ரல் 3ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
பல்வேறு அதிகாரிகளையும் சந்தித்த அவர், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களுக்கும் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
அவர் தனது பயணத்தின் போதான அவதானிப்புகள் குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், சிறிலங்காவில் விசாரணை ஆணைக்குழுக்கள் குறித்து நம்பிக்கை இடைவெளி உள்ளது.
சில ஆணைக்குழுக்கள் பரந்தளவிலான பரிந்துரைகளுடன் பயனுள்ள அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. வேறு சில அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
போதுமான பரிந்துரைகளைச் செய்வதில் அல்லது செயற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளன.
பாதிக்கப்பட்டோரின் உண்மை, நீதி, பரிகாரம், மீண்டும் ஏற்படாதென்ற உத்தரவாதம், ஆகிய உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியுள்ளதால், ஆணைக்குழுக்களின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழிகள் இல்லை. மீறல்கள் நிகழ்ந்துள்ளன.
அவற்றை மறந்து விடும்படி நாம் சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.