உதயங்க வீரதுங்க குறித்து விரைவில் அறிக்கை – மங்கள சமரவீர வாக்குறுதி
ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்க, அந்த ஒரே காரணத்துக்காக எந்த கல்வித் தகைமையோ, இராஜதந்திர தகைமையோ இல்லாத போதும், ரஸ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இவர் மிக்-27 போர் விமானக் கொள்வனவு மோசடியில் தொடர்புபட்டிருந்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு பிரிவினைவாத அமைப்பு ஒன்றுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பது பாரதூரமான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட போதே, விரைவில் இதுபற்றி தாம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.