யாழ். ஊடகவியலாளர் சிறையில் அடைப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழில், பிரதேச செய்தியாளராகப் பணியாற்றும், ஊடகவியலாளர் ஒருவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
என்.லோகதயாளன் என்ற ஊடகவியலாளரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் ஒருவரால், பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, செய்யப்பட்ட முறைப்பாடு குறித்த செய்தியை வழங்கியது தொடர்பாகவே ஊடகவியலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தி தொடர்பாக இன்று காலை விசாரணைக்கு வருமாறு நெல்லியடிக் காவல்துறையினரால் இவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் காவல்நிலையத்துக்கு சென்ற ஊடகவியலாளரை, காவல்துறையினர் இன்று பிற்பகல் பருத்தித்துறை நிதீமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதையடுத்தே அவரை எதிர்வரும், 17ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், ஊடகவியலாளர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான தெளிவான தகவல்கள் ஏதும் இன்னமும் வெளியாகவில்லை.