தலாய்லாமாவுக்கு நுழைவிசைவு மறுக்கும் சிறிலங்கா – சீனா வரவேற்பு
திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சீனா வரவேற்புத் தெரிவித்துள்ளது.
வலுவான சீன ஆதரவு அரசாங்கம் சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு வருமாறு பௌத்த பிக்குகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனினும், தலாய்லாமா கொழும்புக்கு வருவதற்கு நுழைவிசைவு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
“பௌத்த பிக்குகள் தலாய்லாமாவை அழைக்க முடியும். ஆனால் அரசாங்கம் அவருக்கு நுழைவிசைவு வழங்க வாய்ப்பில்லை.
தலாய்லாமா மிகவும் முக்கியமான ஒருவர். ஆனால், சீனாவுடனான நெருக்கமான உறவு இன்னமும் அதிக முக்கியமானது.
ஒரே சீனா என்ற கொள்கையை நாம் மாற்றிக் கொள்ளவில்லை.” என்றும், தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், தலாய்லாமா விவகாரத்தில் சிறிலங்காவின் நிலைப்பாட்டை மதிப்பதாக, சீனா இன்று தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவாசுன்யிங்,
“சிறிலங்கா ஒரு பாரம்பரிய நட்புறவு கொண்ட சீனாவின் அயல் நாடு. சீன – சிறிலங்கா உறவுகள் எப்போதும் சுமுகமாக முன்னேற்றம் கண்டுள்ளன.
இந்த விவகாரத்தில் சீனாவின் கவலைகளை சிறிலங்கா முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கிறது.
சிறிலங்காவுடனான எமது மரபுவழி நட்புறவை தொடர்ச்சியாக வலுப்படுத்திக் கொள்ள நாம் விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.