வடக்கு மாகாண முதல்வருடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பு
நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல், நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனப்படுகொலை தொடர்பாக வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் குறித்தும் இதன் போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், பேச்சுக்களின் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சந்திப்புக் குறித்த தகவல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ள ஐ.நா தரப்பு விரும்பவில்லை என்றும், தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் இன்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை, நாளை மறுநாள் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.