ரவிராஜ் கொலையாளிகளான சிறிலங்கா கடற்படையினர் மூவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சிறிலங்கா கடற்படையினர் மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சிறிலங்கா கடற்படையினரும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று கடற்படையினரில் இருவர் அதிகாரிகள் என்றும் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 2006ம் ஆண்டு நொவம்பர் மாதம் கொழும்பில் வைத்து துப்பாக்கிதாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையினர் மூவரிடமும், 2006ம் ஆண்டு இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள் குறித்து விசாரிக்கப்படவுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.