இந்தியாவின் உதவியுடன் கிழக்கில் அமைக்கப்பட்ட முதல் தொகுதி வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல்தொகுதி வீடுகள், இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடைபெற்றது.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா, வீடுகளையும் அதற்குரிய ஆவணங்களையும் பயனாளிகளிடம் கையளித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு -கிழக்கு மாகாணங்களில், இந்திய உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும், 50 ஆயிரம் வீடுகளில், கிழக்கு மாகாணத்தில் 4000 வீடுகள் அமைக்கும் வேலைகள் கடந்த ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இந்த வீடமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த வீடுகளில் முதல் தொகுதி வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய உதவித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2880 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது 1602 வீடுகள் பூர்த்தியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.