சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவேன் – மகிந்த ராஜபக்ச
தாம் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்ட அபயராமயவில், நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்றைச் சந்தித்துப் பேசிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
“வேறு எந்த அரசியல் கட்சியின் சார்பிலும் போட்டியிட வேண்டிய தேவை எனக்கு இல்லை.
பல அரசியல் கட்சிகள் என்னைப் போட்டியிட அழைக்கின்றன. அத்தகைய அழைப்பை விடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
தேர்தல் குறித்தோ போட்டியிடுவது குறித்தோ தேர்தல் நேரத்தில் தான் பேச வேண்டும்.
இப்போது நான் அரசியலுக்கு இடைவேளை கொடுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.