ஏப்ரல் 23இற்குப் பின்னர் திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தல் – ரவி கருணாநாயக்க
தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படாது என்றும், திட்டமிட்டபடி, ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
”தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதன் விளைவாக, நாடாளுமன்றத் தேர்தல் தாமதிக்கப்படாது.
100 நாள் செயற்திட்ட வாக்குறுதிப்படியே அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தும்
அரசியலமைப்புத் திருத்த சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் தான் தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், வரும் ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது பிற்போடப்படலாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொரடாவான ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.