அழுத்தங்கள் கொடுத்தாலும் செப்ரெம்பரில் அறிக்கை வெளியாகும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு மீண்டும் புதிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் கூட, விசாரணை அறிக்கையை வரும் செப்ரெம்பர் மாதம், தான் வெளியிடுவேன் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில், அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட மூடிய அறை கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் அமர்வு ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தன்னால் இப்போதும் கூட வெளியிட முடியும் என்றும், ஆனாலும் செப்ரெம்பர் வரை பிற்போட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வு, வரும் செப்ரெம்பர் 14ம் நாள் தொடக்கம், ஒக்ரோபர் 02 ம் நாள் வரை நடைபெறவுள்ளது.