சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் தற்காலிக பின்னடைவு – சீனா
கொழும்புத் துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தப்பட்டது, சிறிலங்கா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு தற்காலிக பின்னடைவே என்று சீனா தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சீனாவின் மேற்குப் பிராந்திய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம், ஓ ஜியாலி இந்தக் கருத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.
தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் கருத்து வெளியிட்ட அவர், முதலீட்டாளரால் பெறப்பட்ட பல்வேறு அனுமதிகளை மீளாய்வு செய்வதற்கே திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை நாம் ஒரு தற்காலிகப் பின்னடைவாகவே எடுத்துக் கொள்கிறோம். எமது வரலாற்று ரீதியான நீண்டகால உறுவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் வரும் 26ம் நாள் சீனாவுக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்புத் துறைமுக விவகாரப் பிரச்சினைகளுக்கு, இன்னும் ஒரு வாரத்துக்குள் தீர்வு காணப்பட்டு விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.